Monday, May 13, 2024
Home » மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 93 பயனாளிகளுக்கு ரூ87.50 லட்சம் நிதியுதவி: மாவட்ட கலெக்டர் வழங்கினார்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 93 பயனாளிகளுக்கு ரூ87.50 லட்சம் நிதியுதவி: மாவட்ட கலெக்டர் வழங்கினார்

by Neethimaan

திருவள்ளூர்: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 93 பயனாளிகளுக்கு ரூ87.50 லட்சம் மதிப்பில் நிதியுதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து 267 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

இதில் நிலம் சம்பந்தமாக 92 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 55 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 18 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 45 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 57 மனுக்களும் என மொத்தம் 267 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக நடத்தப்பட்ட தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பயின்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 மாணவர்களை பாராட்டி நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கிடையே மாநில அளவில் நடைபெற்ற குறும்பட திரையிடல் நிகழ்வில், முதலிடம் பெற்ற பூந்தமல்லி இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலருக்கு ரூ12 ஆயிரத்திற்கான காசோலையும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 6 தன்னார்வலருக்கு தலா ரூ2,000 வீதம் ரூ12 ஆயிரத்திற்கான காசோலையும் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கி பாராட்டினார். மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 93 பயனாளிகளுக்கு அனைத்து திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ87.50 லட்சம் மதிப்பீட்டில் தலா 8 கிராம் தங்க நாணயங்களுடன் கூடிய நிதியுதவிகளையும், மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து கணவரை இழந்து ஏழ்மை நிலையில் வசிக்கும் ஒரு பயனாளிக்கு ரூ25 ஆயிரமும், பார்வையற்ற ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ20 ஆயிரமும், கறவைப் பசுவை இழந்த ஒரு விவசாயிக்கு ரூ10 ஆயிரமும் என மொத்தம் 3 பயனாளிகளுக்கு ரூ55 ஆயிரத்திற்கான காசோலைகளை அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு வகை திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு பயின்ற 5 மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ50,000 வீதம் ரூ2,50,000, பட்டப் படிப்பு பயிலாத 7 மாற்றுத் திறனாளிக்கு தலா ரூ25,000 வீதம் ரூ1,25,000, சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 மாற்றுத் திறனாளிக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து கடன் தொகை ரூ1,75,000 பெற்றதற்காக மானியத் தொகை ரூ56,000, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ23,000 என மொத்தம் 16 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ4,54,000 மதிப்பிலான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் விஜயா, மாவட்ட கலெக்டரின் நேர்முக தவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், தனித்துணை கலெக்டர் சி.ப.மதுசூதணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) காமராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபால முருகன், கண்காணிப்பாளர் பார்த்திபன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் பாலமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சித்ரா. ஷோபா, இல்லம்தேடி கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

fourteen − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi