வருசநாடு : கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஒன்றிய பகுதியில் தேனீ வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் வைத்திருக்கும் தேன் பெட்டிகளை கரடிகள் சேதப்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு தேனீ பெட்டிகள் வழங்கி வருகிறார்கள். மேலும் விவசாயிகள் நல்ல வருமானம் பெறுவதற்கு ஒவ்வொரு விவசாய நிலத்திற்கு சென்று தோட்டக்கலை துறை சார்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜபிரியாதர்ஷன் மற்றும் அலுவலர்கள் தினந்தோறும் விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயத்திற்கு மகரந்த சேர்க்கையின் மூலம் நல்ல வருவாய் தருவது பற்றிய கருத்துக்களை விவசாயிகளுக்கு விளக்கி வருகிறார்கள் இந்நிலையில்மயிலாடும்பாறை, பொன்னன்படுக்கை, மலைராஜபுரம், ஒத்த தோட்டம், பசுமலைத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக இரவு பகலாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயப் பகுதிகளில் உள்ள நிலங்களில் விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் தான் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களையும் விவசாயப் பயிர்களையும் தேன் பெட்டிகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.