காங்டாக்: சிக்கிமில் ஆளும் அரசுடனான கூட்டணி முறிந்தவுடன், மாநில அரசை ஊழல் அரசு என பாஜ குற்றம்சாட்டி உள்ளது. சிக்கிமில் 32 சட்டப்பேரவை தொகுதிகளும், 1 மக்களவை தொகுதியும் உள்ளது. இங்கு மக்களவை தேர்தலுடன் பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா(எஸ்கேஎம்) பாஜ கூட்டணி ஆட்சியில் பிரேம் சிங் தமாங் முதல்வராக பதவி வகித்து வருகிறார். இருகட்சிகளிடையே தொகுதி பங்கீடு பிரச்னை காரணமாக வரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட போவதாக பாஜ நேற்று முன்தினம் அறிவித்தது.
கூட்டணி முறிந்த அடுத்த நாளில் ஞானம் பெற்ற பாஜ, சிக்கிமில் ஊழல் ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து சிக்கிம் பாஜ செய்தி தொடர்பாளர் பாசாங் ஷெர்பா நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “எஸ்கேஎம் கட்சியுடன் கூட்டணி முறிந்ததில் பாஜ சந்தோஷமாக, சுதந்திரமாக உள்ளது. சிக்கிமில் ஆளும் அரசு தொடர்ந்து அரசியல் வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தின் நீர்மின் திட்டம், இயற்கை வளங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது.
சிக்கிமில் தேர்தலுக்கு பிறகும் எஸ்கேஎம் கட்சியுடன் பாஜ கூட்டணி வைக்காது. நாங்கள் அந்த மாநில மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். நாங்கள் மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளோம். அவர்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறோம். சிக்கிமில் பாஜ ஆட்சி அமைந்தால் எஸ்கேஎம் தலைவர்கள், அரசு அதிகாரிகளின் மோசடி குறித்து முழுமையாக விசாரித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். நேற்று வரை கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்துவிட்டு இன்று அந்த அரசு மீதே ஊழல் புகார் சுமத்துவது சரிதானா மோடிஜி என்று எஸ்கேஎம் விமர்சித்துள்ளனர்.