கும்பகோணம்: கும்பகோணம் அருகே கடமங்குடி கிராமத்திற்கு வந்த முதலையால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் அதை பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, மகாராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கடமங்குடி கிராமத்தில் களத்தடி மேட்டு தெருவை சேர்ந்தவர் காந்திராஜ். இவர், நேற்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வந்துபோது தனது வீட்டின் பின்புறம் முதலை இருப்பதை கண்டு பயந்து கூச்சலிட்டார். இது தொடர்பாக மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி இளங்கோவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே அவர் வனத்துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் வனச்சரக அலுவலர் பொன்னுசாமி உத்தரவின்பேரில், வனவர் சண்முகம் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன், மகாராஜபுரம் ஊராட்சி எழுத்தர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் வனக்காவலர்கள் துளசிராமன், அருமைதுரை ஆகியோர் காந்திராஜ் வீட்டு பின்புறம் இருந்த 3 அடி முதலையை கயிறு மூலம் கட்டி வேனில் பாதுகாப்பாக எடுத்து சென்று அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.