பழநி, ஏப். 26: பழநி அருகே ஆயக்குடி பகுதி விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழநி அருகே ஆயக்குடி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொய்யா, மா, எலுமிச்சை, தென்னை போன்ற தோட்டப்பயிர்கள் பயிரிடப்பட்டு விவசாயம் நடந்து வருகின்றன. இந்நிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியில் மண் வளம் நிறைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் சமீபகாலமாக சட்டத்திற்கு விரோதமாக இயற்கை வளங்களை சுரண்டக்கூடிய வகையில், நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் மண் அள்ளப்பட்டு வருகின்றன. விவசாய நிலங்களில் சுமார் 20 அடி ஆழத்திற்கு மண்ணை அள்ளி வருகின்றனர். மேலும், இதனால் யானை போன்ற வனவிலங்கினங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டவிரோதமாக நடந்து வரும் மண் கொள்ளையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தடுத்து நிறுத்தி, யுனெஸ்கோவால் 2012ம் ஆண்டில் பாரம்பரியமிக்க பகுதியாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.