சென்னை: பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை கேட்டறிந்த பிறகு பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி 2012ல் லோக் சத்தா கட்சி மாநில தலைவர் ஜெகதீஸ்வரன், 2015ல் தே.மு.தி.க. தலைவர் மறைந்த விஜயகாந்த், 2023ல் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மற்ற மாநிலங்களில் என்ன மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்கிற தகவல்களை சேகரித்து வருகிறோம்.
7 மாநிலங்கள் தகவல்களை வழங்கி உள்ளன. மீதமுள்ள மாநிலங்களிடமிருந்து விளக்கங்களை பெற்ற பின்னர், சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகள் ஒளிபரப்பாகவில்லை என்பதுதான் மனுதாரர்கள் குற்றச்சாட்டாக உள்ளது. நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாவிட்டால், 5 நிமிடம் தாமதமாக ஒளிபரப்பலாம். அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய பகுதிகளை நீக்கிவிட்டு கூட ஒளிபரப்பலாம். அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அரசு தரப்பு தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.