ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு பகுதிகளிலும் பழைய டயர்களை கொண்டு அலங்கார பொருட்கள் செய்யப்பட்டுள்ளன. இவைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளன.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பூங்காவில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஏராளமான தொட்டிகளில் பல வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டு கண்ணாடி மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.இது தவிர பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள ஜப்பான் பூங்காவில் அழகிய மாடம் மற்றும் மீன் தொட்டி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுக்கும் வகையில் பூங்காவில் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வண்ணமிகு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகள் ஒவ்வொன்றும் காய்கறிகள், பழங்கள் போன்ற உருவங்களில் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பூங்காவில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது பழைய டயர்களை கொண்டு தேநீர் கோப்பை உட்பட பல்வேறு வடிவங்களில் மலர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு வகையான மலர்கள் செடிகளும் வைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.