ஊட்டி : ஊட்டி மலர் கண்காட்சியை 3 நாளில் 93 ஆயிரம் பேர் பார்த்து மகிழ்ந்தனர்.ஊட்டியில் கோடை சீசனின்போது சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோத்தகிரி நேரு பூங்காவில் கடந்த 6ம் தேதி காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி, படகு போட்டிகள் நடைபெற்றன. புகைப்பட கண்காட்சி, மரபுவழி நடைபயணம், குன்னூரில் தேயிலை கண்காட்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன.
கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 125வது மலர் கண்காட்சி கடந்த 19ம் தேதி ஊட்டியில் துவங்கியது. கண்காட்சியையொட்டி பூங்கா நுழைவு வாயில் பகுதியில் பல்வேறு வண்ண மலர்களாலான 10க்கும் மேற்பட்ட அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை சிறப்பிக்கும் வகையில் சுமார் 45 ஆயிரம் பல வண்ண கொய் மலர்களை கொண்டு மயில் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. மலர்களால் ஆன தமிழ்நாடு மாநில சின்னங்கள், அழியும் பட்டியலில் உள்ள விலங்குகளின் உருவங்கள், இளைஞர்களை கவரும் வகையில் மலர்களால் ஆன செல்பி ஸ்பாட் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன.
அலங்கார ேமடைகளில் கார்னேசன், ரோஜா மலர்கள், ஆந்தூரியம், ஆர்க்கிட் மலர்கள் ஆகியவைகளும் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். மலர் கண்காட்சி நாளை வரை (23ம் தேதி) வரை நடைபெற உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் குவிந்தனர். குறிப்பாக உள்ளூர் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதற்கேற்றார் போல் இதமான காலநிலை நிலவிதால் கண்காட்சியை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.
பெரிய புல் மைதானத்தில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். கண்காட்சி துவக்க நாளன்று குழந்தைகள் உட்பட 22 ஆயிரத்து 711 சுற்றுலா பயணிகள் பாா்த்து ரசித்தனர். 2வது நாளான்று 30 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், 3வது நாளான நேற்று சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் என 3 நாட்களில் சுமார் 93 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பூங்காவை பாா்த்து ரசித்துள்ளனர். கண்காட்சி இன்னும் 2 நாட்கள் நடைபெறும் என்பதால் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.