ஓமலூர் : சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி கிராம் கலர்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அவரது தோட்டத்தில் சொந்தமாக தென்னை நார் தயாரிக்கும் நார்மிலும், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையும் வைத்து நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் வழக்கம்போல ஆட்கள் தென்னை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் வேலையை நேற்று செய்து கொண்டிருந்தனர். அப்போது நார்மில்லின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்த தொழிலாளிகள் சத்தம் போட்டு கத்தினர். தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ அணையாமல் மளமளவென பரவி, தேங்காய் நார் முழுவதும் எரியத்தொடங்கியது.
இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள், ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, ஓமலூர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், தீ முழுமையாக அணையாமல் புகை வந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் நார் பிரிக்கும் இயந்திரம், கயிறு திரிக்கும் இயந்திரம் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது. மேலும், தீ விபத்து குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓமலூர் போலீசார், தொழிற்சாலைக்கு யாராவது மர்ம நர்கள் தீ வைத்து இருப்பார்களா என்ற சந்தேகத்தின் பேரில், அந்த பகுதிக்கு வந்து சென்றவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.