ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே செல்போனில் காதல் வலை வீசி, பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 16 வயதான 11ம் வகுப்பு மாணவி. கடந்த ஆண்டு ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்த செல்வராஜ்(20), என்பவர் மாணவியின் செல்போனுக்கு போன் செய்துள்ளார். பின்னர் ராங் கால் செய்துவிட்டதாக கூறி அழைப்பை துண்டித்தார்.
இதையடுத்து அடிக்கடி மாணவிக்கு போன் செய்த செல்வராஜ், செல்போனிலேயே காதல் வலை விரித்துள்ளார். இதை நம்பிய மாணவி, செல்வராஜை அவ்வப்போது நேரில் சந்தித்தும் பேசி உள்ளார். அப்போது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக செல்வராஜ் ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதை நம்பிய மாணவி கடந்த 27ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி ஆசனாம்பட்டுக்கு வந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட செல்வராஜ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மாணவியை பெற்றோர் தேடுவதை அறிந்த உறவினர்கள், மாணவி ஆசனாம்பட்டில் இருப்பதாக தகவல் கொடுத்தனர். பின்னர், மாணவியின் பெற்றோர் குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வேலூரில் இருந்து வந்த குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் காதல் வலை விரித்து மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.