சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் தாக்கல் செய்த மனுவில், அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட்மேரீஸ் சாலையில் புதிதாக 10 மாடி மருத்துவமனை கட்டி வருகிறது. அஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக சுற்றுப்புற பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுகிறது. நள்ளிரவையும் தாண்டி அதிகாலையும் பணிகள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம், மாசுகட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ, காவல்துறைக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அஸ்திவாரம் போடும் பணிக்கு மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. சி.எம்.டி.ஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புவனேஸ்குமார், கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி தரப்படவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்தார். இதனை பதிவு செய்தநீதிபதிகள், எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடைவிதித்து, விசாரணையை வருகிற 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.