பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் யார் சட்டமன்றத் குழு தலைவராக யாரை தேர்வு செய்வது என்பது டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் மூலம் தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியின் மாநில தலைவர் டி. கே. சிவகுமார், எதிர்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே. எச். முனியப்பா உள்பட பலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்றத் குழு தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக புதிதாக வெற்றி பெற்ற கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள சாங்கிரிலா ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் நடந்த கூட்டத்தில் புதிதாக வெற்றி கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்றத் குழு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கி ஒரு வரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்துள்ள மேலிட பார்வையாளர்கள் ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் யாரை முதல்வராக தேர்வு செய்யலாம் என்று கருத்து கேட்டு பதிவு செய்தனர்.
பெரும்பாலான எம்எல்ஏக்கள் டி. கே. சிவகுமாருக்கு ஆதரவாக இருப்பது தெரியவருகிறது. கட்சி இவ்வளவு பெரிய வெற்றி பெற சிவகுமார் மேற்கொண்ட முயற்சிகள் தான் காரணம் என்பது பலரின் கருத்தாக உள்ளது. இதனிடையே, சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆதரவாளர்கள் தங்கள் தலைவருக்குதான் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று போர் கொடி உயர்த்தி வலியுறுத்தி வருகின்றனர். இது காங்கிரஸ் தலைமைக்கு தலைவலி ஏற்படுத்தி உள்ளது. எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவு தலைவர்கள் வீடுகளுக்கு சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் சட்டமன்றத் குழு தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக டெல்லியில் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூட்டம் நடக்கிறது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சிவகுமார் மற்றும் சித்தராமையா உள்பட கட்சியின் மூத்த தலைவர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் யார் சட்டமன்றத் குழு தலைவர் என்பது தீர்மானிக்கப்படும் என்று தெரிய வருகிறது. சட்டமன்றத் குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டதும் காங். எம்எல்ஏக்கள் நாளை ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆதரவு கடிதம் கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள் என கூறப்படுகிறது. வரும் புதன்கிழமை பதவி ஏற்பு விழா நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.