*கலெக்டர் கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் மூர்த்தி ஆய்வு
நெல்லை : நெல்லை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு பொறியியல் கல்லூரியை கலெக்டர் கார்த்திகேயன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி, நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை மக்களவை தொகுதிக்கு இன்று (20ம் தேதி) முதல் 27ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. 28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.
30ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். ஏப்.19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. நெல்லை மக்களவை தொகுதியில் அடங்கிய ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் ஒவ்வொரு தொகுதி வாரியாக பாதுகாப்புடன் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணும் அறை, வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, நெல்லை ஆர்டிஓ கண்ணா கருப்பையா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரபு, தாசில்தார்கள் பாளை. சரவணன், நெல்லை ஜெயலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.