நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகர பகுதியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். செல்லபிராணிள் வளர்ப்பில் முக்கிய இடத்தில் நாய் உள்ளது. பலர் தங்களது வீட்டில் பல ரக நாய்களை வளர்த்து வருகின்றனர். ஆனால் தெருக்களில் நாட்டு நாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதனால் சாலைகளில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நாய் குறுக்கே பாயும்போது விபத்தில் சிக்கி உயிர் பலி ஆவதும் தொடர்கதையாக உள்ளது. நாகர்கோவில் மாநகரில் தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாய்க்கு கருத்தடை செய்வதற்கு ஒரு நாய்க்கு ₹1300 செலவு செய்யப்படுகிறது. இதற்காக ஒரு தொண்டு நிறுவனம் நாய்க்கான கருத்தடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
நாகர்கோவில் மாநகர பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடைசெய்து, பராமரித்து, பிடித்த இடத்திலேயே நாய்களை விடவேண்டும். இதற்குதான் மாநகராட்சி ₹1300 செலவு செய்கிறது. இருப்பினும் நாய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கடந்த ஒரு மாதகாலமாக மாநகராட்சி நிர்வாகம் பணம் ெகாடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது மாநகரம் முழுவதும் நாய்கள் பெருக்கம் அடைந்து வருகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த காலங்களில் நாய்கள் அதிகரிக்கும் போது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிடித்து கொல்லப்பட்டு வந்தது. தற்போது நாய்களை கொல்லக்கூடாது. ஆனால் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்குநாள் புதிய புதிய நாய்கள் வந்துகொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் நாகர்கோவில் மாநகர பகுதியில் பல ஆயிரக்கணக்கான வீடுகள், உணவகங்கள் உள்ளன. வீடுகள் மற்றும் உணவகங்களில் மீதமாகும் உணவுகள் சாலையோரம் கொட்டப்படுகிறது.
இதனை தெருக்களின் வாழும் நாய்கள் சாப்பிட்டுவிட்டு அந்த பகுதியிலேயே வசித்து வருகின்றன. இதனால் நாய்களை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது. மேலும் சிலர் தெருநாய்களுக்கு கோழிக்கால்கள் மற்றும் இறைச்சிகழிவுகளை கொண்டு போடுகின்றனர். அதனை சாப்பிட்டு விட்டு அவைகள் வாழ்கின்றன. இந்த தெருநாய்க்களால் பெரிய அச்சுறுத்தல் இருந்து வருகிறது. என்றார்.