திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்பட்டி பகுதியில் பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில், பைக்கில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனம் தெரியாததால் விபத்து நடந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் காலை வேளையில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். இந்நிலையில் இன்றும் கடும் பனி மூட்டம் நிலவியதால் அருகாமையில் இருப்பவை கூட தெரியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
மேலும் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. அதேபோல் கடும் பனிப்பொழிவால் இருந்த இடமே தெரியாமல் காணப்பட்டது. தொடா்ந்து காலை 8 மணி வரைம் பனி மூட்டம் நிலவியதால் சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச்செல்ல பெரும் அவதிப்பட்டனா். வாகனங்களில் முகப்பு விளக்குகள் எரியவிட்ட படி பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்பட்டி பகுதியில் பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து எப்படி நடந்தது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.