முசிறி, ஏப்.29: ஊராட்சிகளின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலையத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் தலைமையில் ஊராட்சி தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. காவல் ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். உதவி ஆய்வாளர் நாகராஜ் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் ஊரின் முக்கிய சாலைகளில் குறிப்பாக நுழைவாயில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும், ஊராட்சி தலைவர்கள் தங்களது கிராமங்களில் இரண்டு நபர்களை (இரவு காவலர்கள்) நியமித்து இரவு நேரத்தில் யாரேனும் சந்தேகப்படும்படி நடமாடினால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், வெளியூர்களில் இருந்து சந்தேகப்படும்படி நபர்கள் வந்தால் தெரிவிக்க வேண்டும்.
வெளியூர் செல்லும் நபர்கள் தங்கள் வீட்டின் முகவரியை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் முசிறி, தா.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், திருப்பதி, கோகிலா, சத்ய விநாயகம், வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உதவியாளர் கருணாநிதி நன்றி கூறினார்.