கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில், போட்டியிட்டு தோல்வி அடைந்த கே.பி.முனுசாமி, 2021ம் ஆண்டு வேப்பனஹள்ளி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நாடாளுமன்ற தேர்தலில், தனது மகன் சதீஷ்குமாரை அதிமுக வேட்பாளராக நிறுத்த முடிவு செய்து இருந்தார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணிக்கு வந்து விடும்.
அப்போது, மாவட்டத்தில் உள்ள வன்னியர்கள் அதிகம் உள்ள கிருஷ்ணகிரி தொகுதியில் வெற்றி பெற்று, கடந்த 2019ல் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமாரிடம், தனக்கு ஏற்பட்ட தோல்விக்கு மருந்து போட காத்திருந்தார். இதனால் கே.பி.முனுசாமி மகன் சத்தீஷ்குமார், மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேரடியாக சென்று கலந்து கொண்டு, தொண்டர்கள் மத்தியில் இடம் பிடித்து வந்தார்.
இந்நிலையில், பாமக கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு டாட்டா காட்டி விட்டு, பாஜ கூட்டணிக்கு தாவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கே.பி.முனுசாமி, கூட்டணியில் பாமக இல்லாததால், வெற்றி பெறுவது சந்தேகம் என்பதால், தனது மகனை களமிறக்கும் முடிவை கைவிட்டுவிட்டார்.
கூட்டணி பலமாக அமைந்தால், தாராளமாக போட்டியிலாம் என்ற ஆர்வத்தில் இருந்த சதீஷ்குமார், பாமக கூட்டணிக்கு வராததால் எம்.பி பதவி ஆசையை கை கழுவியுள்ளார். இந்நிலையில், முனுசாமியின் தீவிர ஆதரவாளரான எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரான, ஓசூர் ஜேபி (எ) ஜெயபிரகாஷிற்கு, கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ளது.