மும்பை: மும்பை மாநகர வளர்ச்சி பணிகளுக்காக பாஜக மற்றும் சிவசேனா ஷிண்டே பிரிவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒரே ஆண்டில் 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு நிதி முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளதும் சர்ச்சையாகி உள்ளது. மும்பை பெருநகரத்தை மும்பை பெருநகர மாநகராட்சி நிர்வகித்து வருகிறது. மும்பை மாநகராட்சியின் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2023 பிப்ரவரி 16ம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்ட்டது.
மும்பை மாநகராட்சிக்கு உப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கி அவர்களின் மூலமாக நகரின் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக மும்பை எம்எல்ஏக்கள் 36 பேருக்கு அதிகபட்சம் தலா 35 கோடி என்ற விகிதத்தில் தங்கள் தொகுதியில் திட்டங்களுக்கு செலவிட 1,260 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் ஆளும் கட்சி ஷிண்டே சிவசேனா பிரிவு எம்எல்ஏக்களுக்கு 24 பேருக்கு மட்டும் 10 மாதங்களில் 500 கோடி ரூபாயை மும்பை மாநகராட்சி ஒதுக்கியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காங்கிரஸ், சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரிவு 15 எம்எல்ஏகளுக்கு 1 ரூபாய் கூட வழங்கப்படவில்லை.
மும்பை மாநகராட்சி தொகுதிக்கு உட்பட்ட 36 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 2 பேருக்கு 2023 டிசம்பர் வரை 375 கோடி ரூபாயை மாநகராட்சி வழங்கியுள்ளது. சிவசேனா ஷிண்டே பிரிவு எம்எல்ஏக்கள் 5 பேருக்கு பிப்ரவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரை பல்வேறு திட்டங்களுக்கு 126 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் உத்தவ் பிரிவு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் நிதி கோரி விண்ணப்பித்தும் மாநகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு குறைந்தபட்ச நிதியை கூட வழங்கவில்லை.
அவர்களது கோரிக்கைகளை மும்பை மாநகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அதனை மனதில் வைத்து ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.