Wednesday, May 22, 2024
Home » கனிமொழி எம்பியை ஆதரித்து கோவில்பட்டி, மாப்பிள்ளையூரணியில் பிரசாரம் பாஜவை தோற்கடிக்கும் வரை திமுகவினர் தூங்க மாட்டோம்

கனிமொழி எம்பியை ஆதரித்து கோவில்பட்டி, மாப்பிள்ளையூரணியில் பிரசாரம் பாஜவை தோற்கடிக்கும் வரை திமுகவினர் தூங்க மாட்டோம்

by Lakshmipathi

கோவில்பட்டி : தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:கடந்த முறை கனிமொழி எம்பியை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

எதிர்க்கட்சியினரை டெபாட் இழக்கச் செய்ய வேண்டும். தவழ்ந்து போய் முதல்வராக பதவியேற்றவர் எடப்பாடி பழனிசாமி. அவரை முதல்வராக்கிய சசிகலாவை காலை வாரிவிட்டவர் தான் பாதம் தாங்கி பழனிசாமி. சசிகலாவிற்கு மட்டுமல்ல, தமிழகம் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் துரோகம் செய்தவர் தான் பழனிசாமி. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் பெயர் சொல்லி அழைக்க வேண்டாம். 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும்.மதுரையில் கடந்த 2019 ஜனவரி 27ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக ஒரே ஒரு செங்கலை பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி நட்டி வைத்தனர். அந்த செங்கலை நான் எடுத்து வந்து விட்டேன். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

ஆனால் பாஜ ஆளும் 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்து விட்டார்கள். மதுரையில் எப்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கிறீர்களோ அன்றைக்கு தான் செங்கலை கொண்டு வந்து கொடுப்பேன். திமுக தலைவர் தொண்டர்களுக்கு தூக்கம் போய்விட்டதாக மோடி கூறுகிறார். உங்களை தோற்கடித்து தமிழகத்தினை விட்டு உங்களை விரட்டும் வரை தூங்க மாட்டோம். அதிமுக-பாஜ இருவரும் கள்ள உறவு வைத்துள்ளனர். தேர்தலுக்கு பின்னர் இருவரும் இணைந்து விடுவார்கள். நடைபெற உள்ள தேர்தலில் நீங்கள் அனைவரும் கனிமொழி எம்பிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சந்திரசேகர், மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன், கருப்பசாமி, சின்னபாண்டியன், இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவி செல்வி சந்தானம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம், பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், சிவசுப்பிரமணியன், பீட்டர், ராமர், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் அழகர்சாமி, உறுப்பினர்கள் சண்முகராஜா, ரவீந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கடம்பூர் முருகன், வழக்கறிஞர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் மாரிச்சாமி, மாரீஸ்வரன், பொருளாளர் ராமமூர்த்தி, அவைத்தலைவர் முனியசாமி, நகர துணைச் செயலாளர் அன்பழகன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் பாரதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கனிமொழி எம்பியை ஆதரித்து, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து டேவிஸ்புரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:நெல்லை, தூத்துக்குடி மழை வெள்ள கால நிவாரண நிதியாக முதலமைச்சரிடம் பேசி இரண்டாயிரம் கோடி பெற்றுத் தந்தவர்தான் உங்கள் வேட்பாளர் கனிமொழி. கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகத்திற்கு வந்த மோடி அதன் பின் தமிழக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதும், சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட போதும், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடும் மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட போதும் வந்து எட்டி கூட பார்க்கவில்லை. ஆறுதல் கூறவும் இல்லை. ஏன் இதுவரை தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை. ஆனால் இப்போது தேர்தல் காலமாக இருப்பதால் அடிக்கடி தமிழகத்திற்கு மோடி வருவதெல்லாம் நம்மை ஏமாற்றுவதற்கு தான்.

உண்மையாக தமிழர்கள் மீது அவருக்கு பற்று இருக்குமேயானால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி எல்லாவற்றையும் முறையாக வழங்கி இருப்பார். தமிழக மக்களுக்கு வேட்டு வைத்த மோடிக்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி நாம் ஓட்டு மூலம் வேட்டு வைக்க வேண்டும். அந்த வேட்டு என்பது கனிமொழிக்கு நீங்கள் அளிக்கும் வாக்குதான். தமிழகத்தையும், தமிழக மக்களையும் மதித்து, தமிழக திட்டங்களுக்கு முறையாக நிதி வழங்கும் ஒன்றிய அரசு அமைய வேண்டும். அதற்கு நம்முடைய முதலமைச்சா் அடையாளம் காட்டுபவரே பிரதமராக வரவேண்டும்.

இதில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் ஜோயல், இன்பரகு, மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, முன்னாள் எம்.எல்.ஏ டேவிட்செல்வின், மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாநில பிரசார குழு செயலாளர் ஜெசி பொன்ராணி, மருத்துவ அணி துணைச்செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய குழு தலைவர்கள் ரமேஷ், வசுமதி அம்பாசங்கா், ஓன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், இளையராஜா, ராமசாமி, தெற்கு மாவட்ட இளஞைர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கா், பால்துரை, ஸ்டாலின், வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், தெற்கு தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞர் அணி அமைப்பாளா் அருண்சுந்தா், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கியமேரி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

20 + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi