புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.80,455 கோடி இழப்பீடு வழங்க வேண்டிய 10.46 லட்சம் மோட்டார் வாகன விபத்து உரிமை கோரல்கள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த வழக்கறிஞர் கே.சி.ஜெயின் என்பவர், இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு அளித்துள்ள பதில் விபரம் வருமாறு: கடந்த 2018-19ம் நிதியாண்டில் நாடு முழுவதும் ரூ.52,713 கோடி இழப்பீடு வழங்க வேண்டிய 9.09 லட்சம் மோட்டார் வாகன விபத்து உரிமை கோரல்கள் நிலுவையில் இருந்தன. இது 2022-23ம் நிதியாண்டில் 10.46 லட்சம் மோட்டார் வாகன விபத்து உரிமை கோரல்களாக அதிகரித்தன.
அந்த விபத்துகளில் வழங்க வேண்டிய இழப்பீடு ரூ.80,455 கோடியாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கே.சி.ஜெயின் கூறுகையில், ‘சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் உரிமை கோரல்களில் முடிவு எடுப்பதில் காலதாமதம் நிலவுகிறது. விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உரிய இழப்பீடு வழங்க சராசரியாக நான்கு ஆண்டுகளாகிறது. இந்த காலதாமதத்தைக் கருத்தில் கொண்டு மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 164ஏ-இன் கீழ், விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு நிதி நிவாரணம் கிடைக்க இடைக்கால திட்டம் ஒன்றை ஒன்றிய அரசு வகுக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்’ என்றார்.