மதுரை:மதுரை, கோமதிபுரம் அன்புநகர் ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் சுகாதாரத்துறையில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி வாசுகி (67). மகன் கோதண்டபாணி (47), மகள் உமாதேவி (44). மகன், மகள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் சொந்த வீட்டில் வசித்து வந்தனர். பாண்டியன் கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. வாசுகியின் வீடு கடந்த 3 நாட்களாக பூட்டி கிடந்தது. வெளியிலும் இவர்களின் நடமாட்டம் இல்லை. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வாசுகி, உமாதேவி ஆகிய இருவரும் இறந்த நிலையில் கிடந்தனர். போலீசார் விசாரணையில், இறந்து போன வாசுகி மற்றும் மகன், மகள் வறுமையில் வாடி வந்துள்ளனர். மின் கட்டணம் கூட செலுத்த வழியில்லாமல் இருந்துள்ளனர். இந்த வறுமையில் மூவரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என பல கோணங்களில் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.