*சித்தூர் ஏடிஜே நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சித்தூர் : சித்தூர் அருகே கடந்த 2005ம் ஆண்டு தாய் மற்றும் மகளை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு சித்தூர் ஏடிஜே நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சித்தூர் மாவட்டம், தம்பல்லப்பள்ளி மண்டலம், கங்கிரெட்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் சையத் மௌலாலி(48). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் கடந்த 2005ம் ஆண்டு தகாத உறவு இருந்து வந்தது. இதற்கிடையில் சையத் மௌலாலி அந்த பெண்ணின் மகளான மைனர் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை அறிந்த தாய் இதுகுறித்து சையத் மெளாலாலியிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சையத் மெளாலி தாய் மற்றும் மகளை கொடூரமாக தாக்கி பலாத்காரம் செய்து கொலை செய்தார்.
இதுதொடர்பாக சித்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு போலீசார் சையத் மௌலாலியை கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று ஏடிஜே நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ் பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அதில், தாய் மற்றும் மைனர் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த சையத் மௌலாலிக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.