சென்னை: முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக மோகனை அரசு நியமித்துள்ளது. தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இந்திய ஆட்சி பணி (ஐஏஎஸ்) மற்றும் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக தமிழ்நாடு அரசு அவ்வப்போது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்தவகையில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநராக பணியாற்றி வந்த மோகன் ‘முதல்வரின் முகவரி’ திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே, முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த ஷில்பா பிரபாகரன் சதீஷ் அதிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதேபோல், திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த வைத்தியநாதன் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது.