கடலூர்: கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட டாக்டர் விஷ்ணு பிரசாத் 1 லட்சத்து 85 ஆயிரத்து 856 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நேற்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடமிருந்து பெற்று கொண்ட பின் விஷ்ணுபிரசாத் கூறியதாவது: நடந்து முடிந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும் மோடிக்கும் எதிரான தேர்தல். இதில் தமிழக மக்கள் ஜனநாயகத்தின் ஆதரவினை பதிவு செய்து வெற்றி வாய்ப்பை அளித்துள்ளனர்.
மேலும் மோடியின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிரான வெற்றியாகும். இதற்கு தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கடலூர் தொகுதியில் வெற்றிக்கு வழிகாட்டிய தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், காங்கிரஸ் பெருந்தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ெதாகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்கவும், மக்களுக்காக உழைக்கவும் காத்திருக்கிறேன். என்எல்சி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.