சென்னை: மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் போராட்டம் அறிவித்த தமிழக காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் வீட்டு சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன், கருப்பு பலூன் பறக்க விடும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை, சென்னை போரூரில் உள்ள இல்லத்தில் போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். பிரதமர் இன்று தமிழகத்தில் இருந்து திரும்பும் வரை அவர் வீட்டு காவலில் வைக்கப்படுவார் என்று தெரிகிறது. இது குறித்து எம்.பி.ரஞ்சன் குமார் அளித்த பேட்டியில் “தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி கொண்டிருக்கிறது மோடி அரசு. நிதிப்பகிர்விலிருந்து பேரிடர் நிவாரணம் வரை துரோகத்தை மட்டுமே ஒன்றிய பாஜ அரசு செய்து கொண்டிருக்கிறது. எனவே தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்த மோடி, தமிழ் மண்ணில் கால் பதிக்கக்கூடாது. பிரதமர் தமிழகம் வரும் போது எல்லாம் இது போன்ற போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.