சென்னை: மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு எழுந்து நடக்க பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையில் ரத்த குழாயில் 4 அடைப்புகள் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றாப்பட்ட அவருக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சை முடிந்து தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு எழுந்து நடக்க பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியால் திட, திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள முடிகிறது. செந்தில் பாலாஜியால் தற்போது பேச முடிவதுடன், தானாகவே அமரவும் முடிவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே நீதிமன்ற காவல் இன்றுடன் முடியும் நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் செந்தில் பாலாஜி இன்று ஆஜராக வாய்ப்பு உள்ளது.