டெல்லி: சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராக அமைச்சர் செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இதையடுத்து இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரித்தார். நீதிபதி வழக்கு குறித்து தனது கருத்தை தெரிவிக்கையில், ‘செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான். அவர் குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நிரூபிக்கட்டும். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று இரண்டு நீதிபதி அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராக அமைச்சர் செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா மேல்முறையீடு செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த வழக்கில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.