திருவண்ணாமலை: விவசாயிகளை வஞ்சிப்பது அரசின் நோக்கம் அல்ல என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சிப்காட் விவகாரம் தொடர்பாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலையில் செய்தியாளர்ளை சந்தித்து பேசினார். அப்போது; ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செய்யாறு பகுதியில் சிப்காட்டுக்கு நிலம் எடுக்கும் பணி 3 கட்டங்களாக நடைபெற்றது. தொழிற்சாலை கொண்டு வருவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
செய்யாறு சிப்காட்டில் 55 நிறுவனங்கள் வர உள்ளன. நிலம் கையகப்படுத்தாமல் தொழிற்சாலையை எங்கு அமைப்பது? கிருஷ்ணகிரியில் இருந்து வந்து போராட்டம் நடத்துவது சரியா?. நிலங்களுக்கு இரண்டரை மடங்கு விலை தரப்படுகிறது. இளைஞர்கள், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் நோக்கம். விவசாயிகளை சிலர் போராட்டத்துக்கு தூண்டுகின்றனர். திட்டமிட்டு அரசு பணியை தடை செய்ய முயற்சிக்கின்றனர். விவசாயிகளை வஞ்சிப்பது அரசின் நோக்கம் அல்ல.
குண்டர் சட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர் என்னிடம் மனு அளித்துள்ளனர். கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரிடம் எடுத்துக் கூற உள்ளேன். எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த முயற்சித்தார். தற்போது அரசியலுக்காக எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டினார்.