சென்னை: விவசாயிகளுக்கு நன்மை செய்யும் அரசே மக்களுக்கான அரசு என்று கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம் ஒவ்வொரு ஆண்டும் குறுகிய கால கூட்டுறவு கடன் அமைப்புகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பல்வேறு கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று நடந்த கருத்தரங்கை துவக்கிவைத்து கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக தமிழ்நாடு போற்றப்படுகிறது. கூட்டுறவு கடன் சங்க சட்டம் 1904ம் ஆண்டிலேயே நமது மாநிலத்தில் இயற்றப்பட்டது. இந்தியாவின் முதல் கூட்டுறவு கடன் சங்கம் 1904ம் ஆண்டு திருவள்ளுர் மாவட்டம் திரூரில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியும் 1905ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மேலும் இதுபோன்று பல முதன்மை சங்கங்கள் நமது மாநிலத்தில் உள்ளன.
விவசாயிகளுக்கு நன்மை செய்யும் அரசே மக்களுக்கான அரசு என்ற வகையில் திராவிட மாடல் அரசு எப்போதுமே மக்களுக்கான, விவசாயிகளுக்கான அரசு தான் என்ற குறிக்கோளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் தலைமையில் சீரிய முறையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுவரும் நமது மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம் ஊரக குறுகிய கால கூட்டுறவு கடன் அமைப்பிற்கான ‘அமுத காலம்’ (2022-47) மீதான தொலைநோக்கு பார்வை குறித்த தேசிய கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கருத்தரங்கில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பதிவுத்துறை தலைவர் சிவன் அருள், மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் தலைவர் கொண்டுரு ரவீந்தர் ராவ், மேலாண்மை இயக்குநர் பீமா சுப்ரமணியம் மற்றும் அனைத்து மாநில தலைமை கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.