Sunday, October 6, 2024
Home » மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை புறநகர் பகுதிகள் 3வது நாளாக நீரில் மிதக்கிறது: லட்சக்கணக்கானோர் பாதுகாப்பாக மீட்பு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை புறநகர் பகுதிகள் 3வது நாளாக நீரில் மிதக்கிறது: லட்சக்கணக்கானோர் பாதுகாப்பாக மீட்பு

by MuthuKumar

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை புறநகர் பகுதிகள் 3வது நாளாக ேநற்றும் வெள்ள நீரில் மிதக்கிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 நாட்கள் பெய்த கனமழை காரணமாக பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகிறது. ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளிறேப்படுகிறது. இதனால் அடையாறு, கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு, பகிங்காம் கால்வாய் என அனைத்து நீர்வழி பாதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அடையாறு வழியாக கடலில் கலக்கிறது. இது தவிர 30 ஏரிகளின் உபரி நீர் அடையாறில் கலக்கிறது. இதனால் அடையாறில் 45 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் ஓடுகிறது. கனமழை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், பகுதிகளில் இருந்து தண்ணீர் சிறு சிறு கால்வாய்கள் வழியாக அடையாறில் கலக்கிறது. இதனால் முடிச்சூர், வரதராஜபுரம், பழைய பெருங்களத்தூர், புது பெருங்களத்தூர், மேற்கு தாம்பரம், ஊரப்பாக்கம், வண்டலூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இங்குள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

அதேபோல், பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் மற்றும் கூவம் ஆறு வழியாக செல்லும் தண்ணீரால், மாதவரம், அம்பத்தூர், ஆர்.கே.நகர், ஆவடி மற்றும் வடசென்னை, மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உணவு பொருட்கள் இன்றி மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களை தமிழ்நாடு அரசு சார்பில் 75 ஆயிரம் மீட்பு பணியாளர்கள், 400 படகுகள் மூலம் சென்று மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் மழை இல்லாததால் தங்களது மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, அடையாறு வழிப்பதைகளில் உள்ள குடியிருப்புகள் தான் அதிகளவில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இப்பகுதிகள் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து தொடர்புகளில் இருந்தும் துண்டித்து விடப்பட்டுள்ளது. செல்போன் டவர்கள் வேலை செய்யாததால் இவர்களை மீட்பதில் பெரும் சிரமாக உள்ளதாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நீச்சல் தெரிந்த நபர்கள் வெளியே வந்து தகவல் அளித்தால் மட்டுமே மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். பசியால் 3 நாட்களாக அவதிப்பட்டு வரும் மக்களுக்கு குடிநீர், உணவு பொட்டலங்கள் வழங்கிய பின்னரே படகு மூலம் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

19 − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi