தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு, 28வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக ஒன்றிய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும், தமிழகத்தின் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் ஒன்றிய அரசை கண்டித்தும், கர்நாடகம் 2023-24ம் ஆண்டுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தரக்கோரியும், அதிமுக சார்பில் தஞ்சை திலகர் திடலில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முன்னிலை கொடுக்கும் அரசு என்றால் அது அதிமுக அரசுதான். விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. நமது உரிமை பறிபோகும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இதற்காகத்தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். காவிரி மேலாண்மை ஆணையம் முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. இந்த ஆணையத்துக்கு ஒன்றிய அரசால்தான் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடப்பதாக கூறிவிட்டு, ஒன்றிய அரசை கண்டித்து எடப்பாடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. போகிற இடமெல்லாம் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று பேசும் எடப்பாடி, ஒரு இடத்தில் கூட பாஜவை கண்டித்து வாய் திறந்து பேசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.