Sunday, October 6, 2024
Home » மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் தென்படவில்லை: மாவட்ட வன அலுவலர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் தென்படவில்லை: மாவட்ட வன அலுவலர்

by Suresh

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் தென்படவில்லை எனவும் சிறுத்தை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் சிக்கவில்லை எனவும் மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். சிறுத்தை நடமாட்டம் பதிவாகாததால் அருகாமை மாவட்டங்களான தஞ்சை, திருவாரூரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதை தொடர்ந்து ஐந்து நாட்களாக அந்த பகுதியில் சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிவாய் பகுதியிலிருந்து 2 கி.மீ. உள்ள கிராமத்தில் சிறுத்தை தென்பட்டதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர். சிறுத்தை கால் தடத்தை கண்டறிவதில் நிபுணர்களான பொம்மன், காலனுடன் இணைந்து தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், சிறுத்தையை கண்டறிய கோவை WWF- India நிபுணர் குழு 30 கேமரா ட்ராப்புகளுடன் களமிறங்கி விஞ்ஞானப்பூர்வமாக கண்டறிய களப்பணியாளர்களுடன் கூட்டாக பணிகள் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் ஒரு வரமாக போக்கு காட்டி வரும் சிறுத்தை தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கப்பேட்டை பகுதியில் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி முதல் சுற்றித்திரிந்த சிறுத்தை கடந்த 2 நாட்களாக 22கி.மீ. தொலைவிலுள்ள காஞ்சிவாய், பேராவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்த நிலையில் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்தபோது சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகவில்லை எனவும் சிறுத்தை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் சிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை நடமாட்டம் பதிவாகாததால் அருகாமை மாவட்டங்களான தஞ்சை, திருவாரூரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் வன அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில்
வனத்துறையினர் முகாமிட்டு சிறுத்தை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

thirteen + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi