சீர்காழி : மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் ஒதுங்கிய மர்ம இரும்பு பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பெட்டியை சென்னை எடுத்து சென்று ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் கடற்கரையோரம் ஒன்றரை அடி நீலமும், ஒரு அடி அகலமும் கொண்ட சந்தன கலர் பெயின்ட் பூசப்பட்ட, முழுமையாக மோல்டிங் செய்யப்பட்ட கைப்பிடியுடன் 10 கிலோ எடை கொண்ட இரும்பு பெட்டி ஒன்று நேற்று கரை ஒதுங்கியது.
இதுதொடர்பாக மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மயிலாடுதுறை எஸ்பி மீனா, கடல்சார் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு, கடலோர காவல் குழுமம், க்யூபிரிவு, தனிப்பிரிவு மற்றும் சீர்காழி சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கரையில் ஒதுங்கிய மர்ம பெட்டியை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இதனைதொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு கடலோர காவல் குழுமம் இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா முன்னிலையில் சோதனை நடத்தியதில், வெடிகுண்டு போன்ற அபாயகரமான பொருள் இல்லை என தெரியவந்தது.
கரை ஒதுங்கிய பெட்டியை பிரித்து பார்த்தபோது மஞ்சள் கலரில் 24 பிளேட் அடுக்குகளாக ஒட்டும் வகையில் திரவம் அடங்கிய பொருட்கள் இருந்தது.இந்த பொருட்கள் ஒரு வகையான பேட்டரியாக இருக்கலாம். கரை ஒதுங்கிய பெட்டியில் இருந்த பொருளை சென்னை எடுத்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு பின்னர் அந்த பொருளின் முழு விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.