வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. மாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலையிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 6.30 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வனத்துறை ஊழியர்கள் பக்தர்களின் உடைமைகளை பரிசோதித்து, எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. நேற்று மாலை 4.55 மணி முதல் பவுர்ணமி ஆரம்பித்ததால், நேற்று மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர், நிர்வாக அதிகாரி ஆகியோர் செய்திருந்தனர்.