மார்த்தாண்டம் : கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் மார்த்தாண்டத்தில் மறியல் போராட்டம் நடந்தது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உணவு, மருந்துகள், வேளாண்மை இடுபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைத்திட வேண்டும்குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ.26 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும், தேசிய கல்வி கொள்கை 2020ஐ ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை உடனே நிறுத்த வேண்டும், தேசிய பணமாக்கல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, தொமுச, ஐஎன்டியுசி, எம்எஸ், ஏஐடியுசி, எம்எல்எப் தொழிற்சங்கங்கள் சார்பில் மார்த்தாண்டம் கனரா வங்கி முன் மறியல் போராட்டம் நடந்தது.
சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் விஜய மோகன் தலைமை வகித்தார். குழித்துறை நகராட்சி சேர்மன் ஆசைத்தம்பி துவக்கி வைத்தார். தொமுச மாவட்ட பேரவை தலைவர் ஞானதாஸ், முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ், குழித்துறை நகராட்சி முன்னாள் சேர்மன் டெல்பின், நகராட்சி கவுன்சிலர் சர்தார்ஷா, உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் பமலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.போராட்டகாரர்கள் மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டிலிருந்து கனரா வங்கி வரை ஊர்வலமாக வருகை தந்தனர். பின்னர் கனரா வங்கி முன் ரோட்டில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 70 பெண்கள் உட்பட 240 பேரை கைது செய்தனர்.