Sunday, October 6, 2024
Home » மாமல்லபுரம் இசிஆர் சாலையில் துருப்பிடித்த விளம்பர தூண் உடைந்து விழும் அபாயம்: அகற்ற வலியுறுத்தல்

மாமல்லபுரம் இசிஆர் சாலையில் துருப்பிடித்த விளம்பர தூண் உடைந்து விழும் அபாயம்: அகற்ற வலியுறுத்தல்

by Suresh

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் மிக உயரமாக அமைக்கப்பட்ட இரும்பிலான விளம்பர தூண் துருப்பிடித்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் அதிகளவு வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், அப்பகுதியில் இதேபோல் வைக்கப்பட்ட பல்வேறு ராட்சத விளம்பர பேனர்களை உடனடியாக அகற்றுவதற்கு பேரூராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி செல்லும் இசிஆர் சாலை வழியாக நாள்தோறும் அரசு பேருந்துகள் உள்பட ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும், இசிஆர் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் அப்பகுதி ஓட்டல், ரிசார்ட், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் பிளாட் விற்பனை நிறுவனங்கள் சார்பில் ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் காற்றில் கிழிந்து, அவ்வழியே சென்று வரும் வாகன ஓட்டிகள்மீது விழுவதால், அங்கு அதிகளவில் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

மேலும் ஒருசில ராட்சத விளம்பர பேனர்கள் எவ்வித பிடிமானமுமின்றி நிறுத்தி வைக்கப்படுவதால், அவை இருசக்கர வாகன ஓட்டிகள்மீது விழுந்து அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதேபோல், கடந்த 2019ம் ஆண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பெண்மீது ராட்சத கட்சி பேனர் விழுந்ததில் பரிதாபமாக பலியானதை இங்கு குறிப்பிடலாம். இதைத் தொடர்ந்து, தற்போது சென்னை உள்பட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் ராட்சத விளம்பர பேனர்கள் அமைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனினும், நீதிமன்றத் தடையை மீறி ஆங்காங்கே ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இசிஆர் சாலை மற்றும் மாமல்லபுரம் நுழைவு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரமாண்ட விளம்பர தூண் அமைக்கப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட ராட்சத பேனர் நாளடைவில் பலத்த காற்றில் கிழிந்து காணாமல் போய்விட்டது. எனினும், அந்த பிரமாண்ட இரும்பு விளம்பரத் தூணின் பல்வேறு பகுதிகளில் துருப்பிடித்து, முழுமையாக வலுவிழந்து, அந்தரத்தில் இருந்து கீழே உடைந்து விழும் அபாயநிலையில் உள்ளது. அப்பகுதியில் லேசான காற்று அடித்தால்கூட, இரும்பு தூணில் உடைந்த கம்பிகள், இசிஆர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின்மீது விழுந்து, அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் அவலநிலை நீடித்து வருகிறது. இதேபோல், மாமல்லபுரம் பேரூராட்சி பகுதிகளிலும் தனியார் நிறுவனங்கள் மூலம் சில அரசியல் கட்சியினர் ராட்சத விளம்பர பேனர்கள் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த அபாயகர விளம்பர பேனர்களை உடனடியாக அகற்றுமாறு மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுப்பதில் அலட்சியமாக உள்ளனர். எனவே, இசிஆர் சாலை மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் அபாயநிலையில் உள்ள ராட்சத இரும்பு விளம்பர தூண் உள்பட அனைத்து பிரமாண்ட விளம்பர பேனர்களை உடனடியாக அகற்றுவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

You may also like

Leave a Comment

4 + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi