டெல்லி: அதிமுகவை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மீண்டும் பாஜகவில் இணைந்தார். கடந்த 1999ல் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய மைத்ரேயன், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இருந்தார். அதிமுகவில் இருந்தபோது கட்சியின் முக்கிய பொறுப்புகளையும், மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். அதோடு டெல்லியில் நடைபெறக்கூடிய அதிமுக தொடர்பான நிகழ்வுகளையும் கவனித்து வந்தார். ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக மீண்டும் இரண்டாக பிரிந்தபோது, ஒபிஎஸ் அணியில் பயணித்தார்.
ஆனால், திடீரென ஈபிஎஸ் தரப்புக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். அங்கு போதிய முக்கியத்துவம் இல்லாததால் மீண்டும் ஓபிஎஸ் தரப்புக்கு தாவினார். அக்டோபர் மாதம் 9ம் தேதி அதிமுகவில் இருந்து மைத்ரேயனை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் டெல்லியில் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதனால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென் சென்னை வேட்பாளரா நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.