உடன்குடி: லட்சக்கணக்கான பக்தர்களின் ஓம்காளி, ஜெய்காளி கோஷம் விண்ணதிர குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய விடிய தரிசனம் செய்தனர். மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தசரா திருவிழா, கடந்த 15ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 14ம்தேதி காளி பூஜை, சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நடந்தது.
15ம்தேதி அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா, சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. பின்னர் விரதமிருந்து வேடமணியும் பக்தர்கள் காப்பு கட்டினர். திருவிழாவில் 10 நாட்களும் இரவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா வரும் வைபவம் நடந்தது. 10ம் திருவிழாவான நேற்று (24ம்தேதி) காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்களின் ஓம்காளி, ஜெய்காளி கோஷம் விண்ணதிர முத்தாரம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்தார்.
இன்று (25ம்தேதி) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருளியதும் அபிஷேக ஆராதனை, அதிகாலை 2 மணிக்கு அம்மனுக்கு சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பு சாந்தாபிஷேக ஆராதனையும், தொடர்ந்து திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் சென்றடைதலும் நடந்தது. காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதியுலா புறப்படுதல் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு அம்மன் திருக்கோயில் வந்து சேர்தல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12ம் திருவிழாவான நாளை (26ம்தேதி) அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், பாலாபிஷேகம் நடக்கிறது.
திருவிழாவையொட்டி நாகர்கோவில், நெல்லை, சாத்தான்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும் பக்தர்கள் குவிந்தனர். தசரா குழுவினர், முக்கிய கிராம சந்திப்புகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூலில் ஈடுபட்டு ஊர்வலமாக குலசேகரன்பட்டினம் வந்தனர். பக்தர்களின் வசதிக்காக குலசேகரன்பட்டினத்தில் ஆங்காங்கே சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.