செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் அருகே, சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ராணிப்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு இருங்குன்றப்பள்ளி தனியார் பீர் கம்பெனிக்கு, நேற்று காலி பாட்டில்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி வந்தது. காட்டாங்கொளத்தூர் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென அதன் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர் மீடியன் மீது மோதி கவிழ்ந்தது. பாட்டில் முழுவதும் சாலையில் சிதறியது. இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மறைமலை நகர் போலீசார் பாட்டில்களை அகற்றினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.