சென்னை: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மெகா லோக் அதாலத்தில் 62,559 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.505 கோடியே 78 லட்சத்து 18,659 பைசல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்வு காண, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, மக்கள் நீதிமன்றங்கள் எனப்படும் தேசிய லோக் அதாலத் தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்டது.
இந்த லோக் அதாலத்தில் நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு முன்பான காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர்கள் தகராறு வழக்குகள், மின்சாரம், தண்ணீர் கட்டணம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 64 ஆயிரத்து 410 வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதேபோல், நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யத்தக்க காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 441 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த வழக்குகளில் தீர்வு காண, சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 அமர்வுகள், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 4 அமர்வுகள், கீழமை நீதிமன்றங்களில் 462 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் 62,559 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூபாய் 505 கோடியே 78 லட்சத்து 18,659 பைசல் செய்யப்பட்டது.