Sunday, October 6, 2024
Home » பெற்றோருக்கு பணம் அனுப்புவதை நிறுத்தியதால் ஆத்திரம் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

பெற்றோருக்கு பணம் அனுப்புவதை நிறுத்தியதால் ஆத்திரம் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

by Ranjith

சென்னை: தனது பெற்றோருக்கு பணம் அனுப்புவதை நிறுத்திய மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் வாடகை கார் டிரைவராக இருந்த ஜெயராஜும், வணிக வளாகம் ஒன்றில் காவலாளியாக இருந்த அவரது மனைவி இலக்கியாவும் வேளச்சேரி நேரு நகரில் வசித்து வந்தனர். பணியிலிருந்து தாமதமாக வரும் நாட்களிலும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட நாட்களிலும் இலக்கியா கணவரிடம் பணம் கொடுத்து பிரியாணி வாங்கி வர சொல்லி இருவரும் சாப்பிடுவது வழக்கம்.

இதேபோன்று அடிக்கடி பணம் கொடுத்து பிரியாணி வாங்கி வரச் சொல்வதால் பணம் எங்கிருந்து வருகிறது என்று கணவன் கேட்டபோது, மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோருக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டதால் தற்போது நல்ல சாப்பாடு சாப்பிடுவதாக இலக்கியா கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஜெயராஜ் திட்டியதால் ஆத்திரமடைந்த இலக்கியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி உள்ளார். பின்பு சமாதானம் அடைந்து இருவரும் உறங்கிய நிலையில், நள்ளிரவில் விழித்த ஜெயராஜ் இலக்கியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல செட் அப் செய்து பிறரை நம்ப வைத்துள்ளார்.

கடந்த 2019 டிசம்பரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இலக்கியாவின் வளர்ப்பு தாய் மணிமொழி அளித்த புகாரின்படி, கிண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடல் பரிசோதனை அறிக்கையில் இலக்கியா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் இலக்கியாவின் கணவரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லி குளம் வணிக வளாகத்தில் உள்ள சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.ஆர்த்தி ஆஜராகி வாதிட்டார் வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் ஜெயராஜுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையில் ரூ.10 ஆயிரத்தை இலக்கியாவின் வளர்ப்பு தாயிடம் வழங்கவும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

19 − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi