புதுடெல்லி: ‘2024ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்திப்போம்’ என்று மாநிலங்களவை எம்பி கபில் சிபல் தெரிவித்துள்ளார். பிரதமராக மோடி பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை மாநிலங்களவை எம்பி கபில் சிபல் விமர்சித்துள்ளார். இது குறித்து கபில்சிபல் தனது டிவிட்டர் பதிவில், ‘மோடியின் 9 ஆண்டுகளில் ஊடகங்கள் லாபத்துக்காக செயல்படுகின்றன. இந்தியா என்பது மோடிக்கானதாக மாறியுள்ளது. பயம் மற்றும் ஏமாற்றுதலே மிஞ்சியிருக்கிறது. இவை எல்லாம் சரிப்படுத்த முடியாதவை ஆகி உள்ளன.
அரசியல் பிளவுபட்டுள்ளது, நல்ல நாட்கள் படிப்படியாக மறைந்துவிட்டது. எதிர்கட்சிகள் தரைமட்டமாகிவிட்டன. முக்கிய தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். நிறுவனங்கள் கையகப்படுத்தப்படுகிறது. சமூகம் சிதைந்துவிட்டது. எனவே, 2024ம் ஆண்டு பொது தேர்தலில் ஆட்சி மாற்றம் தேவை. 2024ம் ஆண்டு மாற்றத்துக்காக இப்போதே நாம் பிரார்த்திப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.