கும்பகோணம் : கும்பகோணம் ரயில் நிலையத்தில் நெல் மூட்டைகளை ஏற்ற வந்த சரக்கு ரயிலின் இன்ஜின் தடம் புரண்டது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக நேற்று காலை 11 மணியளவில் நான்காவது தடத்திற்கு வந்தது. அப்போது சரக்கு ரயிலின் இரண்டு இன்ஜின்களில், முன் இன்ஜினை பின் நோக்கி இயக்கிய போது எதிர்பாராத விதமாக முதல் இன்ஜினில் உள்ள மூன்று சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம்புரண்டது.
இதையறிந்த சரக்கு ரயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின்னர் தடம்புரண்ட ரயில் இன்ஜினை தொழிற்நுட்ப பணியாளர்கள் மூலம் சரி செய்யும் பணி தொடர்ந்து நடந்தது. இந்த சம்பவத்தால் பயணிகள் ரயிலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என ரயில் நிர்வாக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.