நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை அரசு முதன்மை செயலாளர் குமரகுருபரன் நேற்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன் குமரி மாவட்டம் வருகை தந்திருந்தார். அவர் நேற்று காலையில் குமரி மாவட்ட கலெக்டர் தர் தலைமையில் சுசீந்திரம் ஆதி திராவிடர் நலன் அரசு பள்ளி மாணவியர் விடுதி அங்குள்ள கடைக்கிராமம் பகுதியில் அமைந்துள்ளதை பார்வையிட்டார். சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சி நங்கை நகர் மேல்நிலை பள்ளியில் நீர்த்தேக்க தொட்டி ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் உள்ளது. அதன் நிலையை ஆய்வு செய்தார். தொடர்ந்து மழையினால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் கட்டிடங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளிக்கு வருகை தந்தவர் அங்குள்ள ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்டார். தொடர்ந்து வேதியியல் ஆய்வகத்தில் உயர்தர புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து தென்தாமரைக்குளம் அரசு தொடக்க பள்ளியை பார்வையிட்டார். அங்குள்ள வடிகால் வசதிகள், அடிப்படை தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார். பள்ளி சத்துணவு கூடத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து கொட்டாரம் அரசு மேல்நிலை பள்ளியையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் குமரகுருபரன் கூறியதாவது:கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை சீற்றத்தினால் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மழைவெள்ளம் புகுந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் ஸ்மார்ட் வகுப்பறையினை பார்வையிட்டதோடு, மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள் குறித்தும் ஆசிரியையிடம் கேட்டறியப்பட்டது.
மேலும் சிறப்பு பள்ளி திட்ட நிதியின் கீழ் ரூ.6 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறைகள், மறுசீரமைக்கப்பட்டு வரும் வேதியல் ஆய்வகம், புனரமைக்கப்பட்டுவரும் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, இப்பணிகளை தரமானதாகவும், விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆவணங்கள் வைப்பறைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவற்றினை சிறந்த முறையில் பாரமரித்திட தலைமையாசிரியர்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட உள்ள விலையில்லா மிதிவண்டிகளையும் பார்வையிட்டதோடு, பள்ளியின் அடிப்படை வசதிகள் சரியான முறையில் பாரமரிக்கபட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, சில சீரமைப்புகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கண்டுபிடிப்பு ஆய்வகத்தினை பார்வையிட்டு மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை மற்றும் செயல்முறை விளக்கங்கள் குறித்து கேட்டறியப்பட்டதோடு, மாணவ மாணவியர்களின் செயல்முறை கண்டுப்பிடிப்புகளை ஊக்கப்படுத்திடவும் ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழுதான கட்டிடங்களை சீரமைத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆய்வுகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, தலைமையாசிரியர்கள் ஜெமிலா, ஸ்டெல்லா நேவீஸ், ராமசந்திரன், பேபி, பேரூராட்சிகள் இளநிலை பொறியாளர் ராஜாரமேஷ், தென்தாமரைக்குளம் பேரூராட்சி உறுப்பினர்கள் எட்வின், சௌந்தர் ராஜன், ஆசிரியர்கள், பணியாளர்கள், உட்பட பலர் உடனிருந்தனர்.
மழைநீர் வடிகால் ஓடை அமைக்க அறிவுறுத்தல்
குமரகுருபரன் மேலும் கூறுகையில், தென்தாமரைக்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் மழை நீர் தேங்கி மாணவர்களுக்கு இடையூராக இருப்பதாக பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் அப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளியின் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டதோடு, மழைநீர் வடிகால் ஓடை அமைத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து கேட்டறியப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாணவர்களிடம் கலந்துரையாடப்பட்டது. அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதோடு, மழைநீர் உட்புகமால் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு முதன்மை கல்வி அலுவலர், தலைமையாசிரியர், பொறியாளர் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டது. கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பள்ளி திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுஉள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.