கூடலூர் : கூடலூரில் தனியார் பள்ளி மாணவி ஒருவரின் கருக்கலைப்புக்காக மருந்து வழங்கிய மருந்துக்கடைக்கு மருத்துவத்துறையினர் ‘சீல்’ வைத்து பூட்டுபோட்டனர். மேலும் மருந்து வழங்க பரிந்துரை செய்த தனியார் மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்த மாணவி ஒருவர், அதே பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரால் கர்ப்பம் அடைந்துள்ளார். மாணவிக்கு கருக்கலைப்பு செய்வதற்காக அவரது பெற்றோர் கூடலூரில் உள்ள தனியார் மருத்துவர் ஒருவர் மூலமாக மருந்துக்கடை ஒன்றில் மருந்து வாங்கி உள்ளனர்.
இந்த மருந்தை உபயோகித்தபோது மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்வதற்கான முயற்சி நடைபெற்றிருப்பது குறித்து கூடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய கூடலூர் போலீசார் மற்றும் மருத்துவத்துறையினர் மருந்து தந்த தனியார் மருந்துக்கடைக்கு நேற்று முன்தினம் ‘சீல்’ வைத்தனர். தொடர் விசாரணைக்கு பின்னர், மாணவிக்கு கருக்கலைப்பு மருந்து வழங்க பரிந்துரை செய்த தனியார் மருத்துவர் நரேந்திர பாபுவை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.