புதுடெல்லி: டெல்லி டவுன்ஹாலில் நடைபெற்ற மகளிர் கவுரவிப்பு நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் பேசுகையில் , “மகளிருக்கு அதிகாரம் அளிப்பது என்ற பெயரில் மோசடி நடந்து வருகிறது. ஒருசில பெண்களுக்கு பதவி கொடுத்து விட்டு அதிகாரம் கொடுத்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த பதவியால் ஒருசில பெண்கள் மட்டுமே பயனடைவார்கள். கெஜ்ரிவால் அரசு கொண்டு வந்துள்ள முதல்வரின் பெண்களுக்கு மரியாதை அளிக்கும் திட்டம் 18 வயதை கடந்த அனைத்து பெண்களுக்கும் நிதி ரீதியான உண்மையான அதிகாரம் அளிக்கும்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தகுதியுடைய அனைத்து பெண்களும் இதனால் பலன் பெறலாம். பாஜ பெண்களுக்கு என்ன செய்தது? மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள். பாஜவை ஆதரிக்கும் பெண்களிடம், உங்களுக்கு உங்கள் அண்ணன் கெஜ்ரிவால் மட்டும்தான் துணையாக இருப்பான் என்று சொல்லுங்கள். பல ஆண்களும் மோடியின் பெயரை சொல்கிறார்கள். நீங்கள் அதை மாற்ற வேண்டும். உங்கள் கணவர் மோடி புகழ் பாடினால் அவர்களுக்கு இரவில் சோறு போடாதீர்கள்” என்று வாக்கு சேகரித்தார்.