புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக அவருக்கு 8 சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனை கெஜ்ரிவால் ஏற்காத நிலையில் அவர் மீது டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்கோத்ரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான கெஜ்ரிவாலுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் கெஜ்ரிவால் மீதான புகார் குறித்த விவரங்களை அவரிடம் ஒப்படைக்கும்படியும் அமலாக்கத்துறையை நீதிமன்றம் அறிவுறுத்தியது.