அரசு துறைகள் மற்றும் அனைத்து பயன்பாடுகளிலும் ‘கன்னியாகுமரி’ மாவட்டம் என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் பாஜ போன்ற இந்து அமைப்புகள் மற்றும் கட்சியினர், அழைப்பிதழ்கள், விழா மேடைகளில் ‘கன்யாகுமரி’ என்றே பதிவிடுகின்றனர், அழைக்கின்றனர். அகஸ்தீஸ்வரத்தில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்பட்ட பேனரிலும் ‘கன்யாகுமரி’ என்றே எழுதப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக பாஜ தலைவர்களிடம் கேட்டபோது, சமஸ்கிருதத்தில் அப்படித்தான் வரும் என்று கூறினர்.
பொதுக்கூட்ட மேடையில் முழங்கிய பிரதமர் மோடியோ ‘தமிழகத்தின் அடையாளத்தை, கலாசாரத்தை, பண்பாட்டை பாதுகாக்க பாஜ என்றும் முன்னணியில் நிற்கிறது’ என்று குறிப்பிட்டார். இவ்வாறு பாரம்பரியம் மிக்க கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இடத்தின் பெயரை தமிழில் ‘கன்னியாகுமரி’ என்று அச்சடிக்காமல் சமஸ்கிருதத்தில் ‘கன்யாகுமரி’ என்று மாற்றி எழுதி இருந்தார்கள். இதுதான் தமிழ்நாட்டின் அடையாளத்தை காப்பதா? என்று பேனரின் புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.