சென்னை: காஞ்சிபுரம் எல்லப்பன் நகர் பகுதியில் வசிப்பவர்கள் வாசுதேவன் – சரிதா தம்பதி. இவரது மகன் மதன் 80 சதவிகிதம் பார்வை திறன் குறைபாடு உள்ளவர். இவர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் காலனியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பார்வை திறன் குறைபாடு உள்ள நிலையிலும் பள்ளி ஆசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்போடும், பெற்றோரின் உதவியோடும், ஆர்வத்துடன் கல்வி பயின்று வந்தார்.
தற்போது வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் வெற்றி பெற்று தமிழ் 87, ஆங்கிலம் 97, கணிதம் 100, அறிவியல் 96, சமூக அறிவியலில் 97 என மொத்தம் 477 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதல் மாணவனுக்கு சாதனை படைத்துள்ளார். இதையடுத்து மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, ஆசிரியர் சிவசங்கரன் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.