கழுகுமலை, ஜூன் 29: கழுகுமலையில் பள்ளி மைதானம் அருகே ஆபத்தான நிலையில் சரிந்து நிற்கும் பனை மரங்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கழுகுமலை ஆறுமுகநகரில் ஆர்சி சூசை மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்தின் உள்பகுதியிலேயே மைதானம் அமைந்துள்ளது. இங்கு பாடவேளை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் விளையாடுவது வழக்கம்.
மைதானத்தின் சுற்றுச்சுவர் அருகில் சாலையோர நீரோடை கரையில் பனைமரங்கள் உள்ளன. இதில் ஒரு சில மரங்கள் சரிந்து, தாழ்வாக எப்போது வேண்டுமானாலும் விழக்கூடிய சூழலில் காட்சியளிக்கிறது. பனை மரங்கள் விழுந்தால் அவை சாலை மற்றும் பள்ளி மைதானத்திற்குள் தான் விழக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன்பு இந்த பனை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.